வாயில் நுரையுடன் ரத்தம் கக்கி திடீரென்று மரணமடைபவர்களை பற்றி கிராமபுரத்தில் ஒரு கதை சொல்வார்கள், “கொள்ளிவாய் பிசாசு அறைந்து விட்டது. அதனால்தான் வாயில் ரத்தம் கக்கி செத்துவிட்டான்” என்று. உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா…! வெறும் காற்றாக சித்தரிக்கப்படும் ஆவியான கொள்ளிவாய்ப் பிசாசுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று மருத்துவத் துறையினரிடம் கேட்டால், “அதெல்லாம் சும்மா…! முதலில் கொள்ளிவாய் பிசாசு என்ற ஒரு ஜந்து உலகில் இல்லை” என்கிறார்கள்.வாயில் நுரை கக்கி சாவது எல்லாம் உடலில் ஏற்படும் கோளாறால்தான் என்று உண்மையைச் சொல்கிறார்கள்.
ஹார்ட் பெய்லியர் என்ற இதயத்தின் செயல் திறன் குறைவதால் ஏற்படும் பாதிப்பே இந்த கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்த கதை.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வேயில் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் ஹார்ட் பெய்லியர் என்ற நோய்க்கு ஆட்பட்டு இருப்பதாக குறிப்பிடுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் 10 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்கிறது.
சரி,ஹார்ட் பெய்லியர் என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். புதிதாக ஒரு கார் வாங்குகிறோம். ஆரம்பத்தில் அது காடு, மேடு, மலை என்று எளிதாகப் பயணிக்கும். அதுவே பல ஆண்டுகள் ஓடி பழைய கார் ஆனா பின்பு என்ஜினின் சக்தி குறைந்த பின்பு மலைப்பகுதியில் ஏற திணறும். இப்படித்தான் இதயமும் வயது ஆக ஆக உடலின் எல்லா பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. இந்த திணறலைத்தான் ஹார்ட் பெய்லியர் என்கிறோம்.
இதயம் என்பது ஒரு பம்பிங் மோட்டார் போல செயல்படுகிறது. நுரையீரலில் இருந்து வரும் ரத்தத்தை பம்ப் செய்யும் மோட்டார்தான் இதயம். இதயத்திலிருந்து ரத்தக்குழாய்கள் மூலம் உடல் முழுக்க ரத்தம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதயம் என்ற பம்பின் செயல்திறன் குறைந்து, அது வேலை செய்வது தடைப்பட்டால் என்னவாகும்? ரத்தம் நுரையீரலிலேயே தேங்கிக்கிடக்கும். தொடர்ந்து ரத்தம் நுரையீரலில் தேங்கும் போது அங்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அந்த அழுத்தம் தாங்காமல் சிறு ரத்த குழாய்கள் வெடிக்க நேருகிறது. இதெல்லாம் ஆரம்பநிலைதான், இதை சரி செய்து விடலாம். இவற்றில் எல்லாம் அசட்டையாக இருந்தால் இறுதிகட்ட நிலைதான் வாயில் ரத்தம் கக்கி இறப்பது.
ஹார்ட் பெய்லியர் உள்ளது என்பதை இரண்டு முக்கிய அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உடல் சோர்வடைவது, மூச்சு வாங்குவது. இந்த அறிகுறிகளை அசட்டை செய்தால் விளைவுகள் மோசமாகும். ஹார்ட் பெயிலியரின்போது உடல் பாகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் சப்ளை செய்யப்படாததால் உடல் சோர்வடைகிறது. சின்ன வேலை செய்தால் கூட மூச்சு வாங்குகிறது. இந்த அறிகுறிக்குப் பின்பும் கூட விபரீதம் புரியாமல் மெத்தனமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த அவர்களை ‘அக்யூட் பல்மொனரி எடிமா’ என்ற மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். வாயில் நுரையுடன் சில சமயங்களில் ரத்தமும் சேர்ந்து வரலாம். இதைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் தீவிர சிகிச்சை மூலம் காப்பாற்றி விடலாம். கொள்ளிவைப் பிசாசு அறைந்து விட்டது என்று சோகமாக இருந்தால் உயிர் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு.
கொள்ளிவாய் பிசாசு எப்போதும் யாரையும் கொன்றதில்லை என்பதே உண்மை.